page10
மன அமைதி பூங்காவுக்கு ஒரு நல்வாழ்க்கை பாதை
தியானம் என்னும் அற்புத மருந்து
ஒழுங்கான தியான நேரத்தைக் கடைப்பிடியுங்கள். தியானம் மனதை அமைதிப்படுத்துகிறது. மனதில் நிச்சலனத்தன்மையை அது உருவாக்குகிறது. ஒரு மணி நேரம் நீங்கள் ஆழ்ந்து தியானித்தால் கூட அந்த தியானத்தின் மூலம் மனதில் ஏற்படுத்தப்பட்ட பதிவு மீதமுள்ள இருபத்து மூன்று மணி நேரமும் மனதில் தங்கி நிற்கிறது. முன்போல மனம் அலைந்து திரியாது. படிப்படியாக தினசரி தியானத்தின் கால அளவைக் கூட்டுங்கள். இது உங்கள் அன்றாட வேலையுடன் குறுக்கிடாது. ஏனெனில் தியானம் உங்களது பல்வேறு திறமைகளை அதிகரித்து குறைந்த நேரத்தில் வேலைகளை செய்வதற்கான ஆற்றலை உங்களுக்கு அளிக்கிறது.
பயனுள்ள வேலை
எப்பொழுதும் ஏதாவது பயனுள்ள, நன்மை பயக்கும் வேலையைச் செய்யுங்கள். இதை செய்யலாமா, அதைச் செய்யலாமா? என்று அலைந்து திரிவதில் நேரத்தை வீணாக்காதீர்கள். இதனால் பயனற்ற மனப்போராட்டத்தில் நீங்கள் நாட்கள், வாரங்கள், மாதங்கள் ஏன் வருடங்களைக்கூட வீணாக்கி கடைசியில் ஒன்றும் செய்யாமல் போய்விடுவீர்கள். அதிகமாக திட்டங்களைத் தீட்ட வேண்டாம். திட்டம் போடுவது கடவுள்தான். எப்பொழுதும் ஏதாவது நல்லதைச் செய்து கொண்டிருங்கள். ஆக்கபூர்வமான உங்கள் காரியத்தில் இடைவெளி எதுவும் இருக்கவேண்டாம். ஒரு சில கவனக்குறைவான வினாடிகள் கூட வாழ்வில் உங்களை கீழே தள்ளி விடும். காலமே வாழ்வு. நேரத்தைப் பொன்போலப் பாதுகாத்து அதை மிகவும் பயனுள்ள விதத்தில் செலவிடுங்கள்.
நீங்கள் உடலளவில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாலும் மனதைவெறுமையாக வைத்திருக்காதீர்கள். ஜபம், மானஸீகப் பிரார்த்தனை மற்றும் ஏதாவது பயனுள்ள நூல்களைப் படிப்பதில் ஈடுபடுங்கள். எல்லாதொல்லையும் மனதில்தான் ஆரம்பிக்கிறது. கடும் சொற்களும், தீய செயல்களும் மனதில்தான் உதிக்கின்றன. எனவே ஆரம்ப ஸ்தானத்தை சுத்தமாக வைத்திருங்கள். உங்கள் வாழ்வாகிய நதி ஸ்படிகம் போல தூய்மையாகப் பாயும்.
No comments:
Post a Comment